Wednesday, June 15, 2011

குற்றமும் குற்ற உணர்ச்சியும்

ஒரு வழுக்கலான நேர் வழி பாதை. அதை கடந்து போனால் மறுப்பக்கத்தில் உண்மை புலப்படும். அந்த பாதையின் கீழ் மிகப்பெரிய பள்ளம். விழுந்தால் பொய்யான உடலுக்கு வலி தெரியாது, மெய்யான மனது புண்படும். அது உணர்த்தும் வலியை வார்த்தைக்களால் வர்ணிக்க முடியாது! மேலும் வழுக்கல் நிறைந்த அந்த பாதை வழி நடப்பது என்பது கடினம். உண்மை எதுவென கண்டறிய முற்படும் ஒரு நல்லவன் அந்த வழுக்கல் பாதையை கடக்கையில் தவறுதலாக கீழே விழுகிறான். அதனால் அவன் மனதால் அனுபவிக்கும் வலியும் வேதனையும் குத்தி தின்னும் குற்ற உணர்ச்சியையும் பற்றி சுழலும் திரைப்படம்தான் ‘Insomnia’ .

நடிப்பிற்கோர் புது வடிவம் தந்த, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆல் பச்சினோ (Al Pacino) கதாநாயகனாக நடித்த படம் இது. தூக்கமின்றி தவிக்கும் நோய் தான் Insomnia. அவர்கள் கண்கள் குழி விழுந்து காணப்படும். புருவங்கள் எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். நெற்றி சுருக்கங்கள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். நடையில் ஒரு கூன். நிதானமான பேச்சு. சட்டென கோபமுண்டு கத்தி தீர்ப்பது. இத்தனை அம்சங்களும் அழகாய் தன் நடிப்பால் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஆல் பச்சினோ.

‘The Machinist’ என்ற மற்றொரு ஹாலிவுட் திரைப்படத்தில் Christian Bale என்ற அற்புத கலைஞன் இதே ‘Insomnia’ நோயால் பாதிக்கபட்டவனாக நடித்திருப்பார். அது மிகவும் மோசமான நிலை! இந்த நோய் அவனை விழுங்கிய நிலை! அந்த படம் ‘Insomniac எனப்படும் தூக்கமின்றி தவிக்கும் ஒருவனை மிக தெள்ளத்தெளிவாக காட்டிய முயற்சி என்பேன்.

இந்த படம் ‘Insomnia’ வில் கதாநாயகனாக நடிக்க மிக சிறந்த நடிகர் ஆல் பச்சினோ மட்டும் தான். அதை தேர்வு செய்ததால் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது கண் பார்வையின் சிறு அசைவுகளும் நம்மை திரையோடு ஒட்டி அமர செய்யும். சில இடங்களில் மௌனம்! சில இடங்களில் கோபம்! தனது தேர்ந்த நடிப்பால் நம்மை வெகுவாக கவர்வார் ஆல் பச்சினோ. தான் தவறுதலாக செய்யும் செயலை மறைக்க அவர் படும் பாடு. அதை செய்யும் போது அவர் குற்ற உணர்ச்சி அவருடனே பயணித்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக தின்னும். அதை உணர்வுப்பூர்வமாக அனுபவித்த நிலையை திரையில் பிரதிபலித்துள்ளார். தீயவன் தீமையை செய்யும் போது வருத்தப்பட மாட்டான். அவனுள் மனசாட்சி என்ற ஒன்று இருப்பததையே அவன் மறந்திருப்பான், பல நேரங்களில் மறைத்திருப்பான். ஆனால் ஒரு நல்லவன்! தவறில் தெரியாமல் விழுந்து, அதில் மூழ்கிடாமல் தப்பித்து வெளியேறி வர அவன் உடல் அவன் உடன் வரும்!... வரலாம்! ஆனால் அவன் மனம்... அது அவனது எல்லா செயல்களையும் மென்று தின்னும். அதன் பிடி கொஞ்சம் இறுக்கினால் அவனையே விழுங்கும்! அதே நிலையில் தான் என்ன செய்வது என்பதே தெரியாமல் தத்தளித்து நடக்க, செய்த தவறின் நிழல் அவனை விடாமல் பின் துரத்த, இரவு நேரம் சற்று கண் அய்ர்ந்திட கூட விடாமல் நாயகன் படும் பாடு இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நாயகனை போலவே உணர்வர்!

சரி! ஆல் பச்சினோ தான் கலக்கியிருக்கிறார் என்றால், இப்படத்தில் மற்றொரு நடிகர், நவரச கலைஞன் ஒருவர் அசத்தியிருக்கிறார். இதுவரை நகைச்சுவை படங்கள் வழி அவரை ரசித்தவர்கள் இப்படம் பார்த்த பின் வாய்பிளந்து தான் போவார்கள்! அவர் பெயர் ராபின் வில்லியம்ஸ் (Robin Williams). இவர் என்ன செய்தார், அப்படி என்ன வித்தியாசம் இப்படத்தில் காட்டியுள்ளார் என்று என்னை கேட்டால், நான் சொல்லி விடுவேன்! ஆனால் எனது எழுத்துக்கள் அவர் தன் ரசிகர்களுக்கு தர விரும்பிய ஆச்சரியத்தை அழித்து விட கூடும். அதனால் அவரது இன்னொரு முகத்தை, இன்னொரு பரிணாமத்தை இப்படத்தை பார்த்து ரசியுங்கள்! நான் வெகுவாக ரசித்தேன்! J

இப்படத்தில் ஹிலாரி சவான்க் (Hillary Swank) என்ற பிரபலமான நடிகை நடித்துள்ளார். மில்லியன் டாலர் பேபி என்ற படம் மூலம் நம்மை கவர்ந்த திறமை மிகுந்த நடிகை! கதை ஆல் பச்சினோ, ராபின் வில்லியம்ஸ் எனும் இரு பெரும் ஜாம்பவான்களை மட்டுமே சுற்றி இருப்பதால் ஹிலாரியின் பெஸ்ட் இந்த படத்தில் இல்லை என்று சொல்லலாம். மற்றபடி கதையின் இறுதிக்கட்டத்தில் அவர் நடித்த விதம் அருமை.

மேலும் இப்படத்தில் நான் கண்டு ரசித்த விஷயம் – படத்தொகுப்பு! மிக அமைதியான தருணங்களில் கதாபாத்திரம் மனதில் சட்டென மின்னி மறையும் பிம்பங்களை கண் மூடி திறக்கும் நொடியில் திரையில் கோர்த்த விதம் ரசிக்கும் படியாக இருந்தது. கதாப்பாத்திரம் என்ன உணர்கிறார் என்பதை நாம் மிக நெருக்கமாக உணர படத்தொகுப்பு வெகுவாக உதவியுள்ளது! படத்தொகுப்பாளர் – Dody Dorn

இப்படம் தொடங்கும் பொழுது பனி பாறைகள் கூர்மையாக வான்நோக்கி பார்த்து நம்மை வரவேற்கும். அங்கிருந்து கதை முடியும் தருணம் வரை காட்சிகள் படமாக்கபட்ட விதம் அழகு. நகரா புகைப்படத்தில் ‘Patterns’ எனப்படும் ஒன்றை எளிதாய் படம் பிடிக்கலாம். ஆனால் நகரும் திரைப்படத்தில் அதை அழகாய் காட்டுவது என்பது கடினமான விஷயமே! அதை இப்படத்தில் கண்டு ரசிக்கலாம். ஒளிப்பதிவாளர் – Wally Pfister

படத்தின் ஒலிப்பதிவும் கவனிக்கத்தக்கதே! சிறு சிறு நகர்வுகளின் மற்றும் மௌனங்களின் முக்கியத்துவம் படத்தின் விறுவிறுப்பிற்கு கை கொடுத்துள்ளது.

இப்படம் முன்னர் இதே பெயரால், இதே கதை கொண்டு வெளிவந்துள்ளது. Norwegian திரைப்படமான அது 1997இல் வெளிவந்தது. அதை தற்போது தன் பாணியில் வித்தியாசமாக இயக்கியுள்ளார் Christopher Nolan. இன்று வரை புதிய முயற்சிகள், வியக்க தக்க கதைகள் கொண்டு நம்மை திக்குமுக்காட செய்த Nolan, திரைப்பட இயக்குநராக தவமிருக்கும் ஒவ்வொருவரின் இதயங்களிலும் ஓர் சிறந்த உயர்ந்த இடத்தில் இருப்பார். இப்படமும் அவரது ரசிகர்களை வெகுவாக கவரும்! திரைக்கதை வடிவமும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

Insomnia – ஓர் நல்ல படைப்பு. முழு நீள Psychological Thriller பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை தேர்ந்தெடுக்கலாம்.

- பி.சி.பாலசுப்பிரமணியம்

Indian Film Director, ScreenWriter, Actor, Producer - Anurag Kashyap

காங்கிரஸ்க்கு ஜெயாவின் பதில்(அடி!)

Tuesday, June 14, 2011

இனிமேல்!

எப்போதும் எந்நேரமும் கிளின்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்கள் காண்பது என்பதே ஓர் புது அனுபவம் தான். ஈஸ்ட்வுட் திரைப்படங்கள் என்றாலே அதில் புதுமையும் புத்துணர்ச்சியும் நிரம்ப இருக்கும். இது தீவிர ஈஸ்ட்வுட் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

இன்று ஈஸ்ட்வுட் அவர்கள் கடைசியாக இயக்கிய Hereafter என்ற திரைப்படம் பார்த்தேன். வழக்கமாக ஈஸ்ட்வுட் ரசிகர்கள ரசிக்கக்கூடிய விஷயங்கள் பலவும் அழகாய் நெய்து ஓர் நல்ல திரைப்படமாய் அளித்துள்ளார். மிக அதிரடியான காட்சிகள் கொண்டு அதகளப்படுத்தும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இடையே இப்படி ஓர் இயல்பான, ஆனால் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்க கூடிய விஷயம் ஒன்றை கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் படைப்பு இது.

‘Psychic’ என்று சொல்ல கூடிய ஒரு வகை அமானுஷ்ய சக்திகள் கொண்டு உலாவும் மனிதர்களும் அவர்கள் தினந்தோறும் அனுபவிக்கும் சொல்ல முடியா வேதனைகளும் மனதோடு விம்மும் வலிகளும் தான் படத்தின் மைய கருத்து.

எதிர்பாரா விதமாக ஆபத்தில் அல்லது அதிர்ச்சியினுள் சிக்கும் மனிதர்கள் சிலர் இந்த வகை அமானுஷ்ய சக்தியை பெறுகின்றனர். அதன் மூலம் இறந்தவர்களுடன் பேசக் கூடிய அரிய சக்தி அவர்களுக்கு கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஓர் சம்பவத்தில் சிக்கியவர் தான் படத்தின் நாயகி Marie Lelay. புகழ்பெற்ற தொலைக்காட்சி நிருபரான நாயகி, பெரும் சுனாமி அலையினில் சிக்கி, மரணத்தை தழுவி, சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெறுவார். உயிர் பெற்ற பின் அவர் மனதினுள் சில பிம்பங்கள் எழும். அது என்ன, ஏன், எப்படி, என்ற பல கேள்விகளுடன் நடக்கும் அவர், தன் இயல்பு வாழ்க்கையிலிருந்து வழிதழுவி செல்கிறார். விடை அறியும் நேரம் அவரது அனுபவங்களை ஓர் புத்தகமாக தொகுக்கிறார்.

கதையின் நாயகன் George, சிறு வயதிலேயே அனுபவித்த மூளை காய்ச்சலினால் Schizophrenic ஆக மாறி பின் ஒரு Psychic ஆக தற்போது இருப்பார். ஒரு Psychic ஆக இருப்பதன் மூலம் நிறைய பேருக்கு குறி சொல்லி பணம் பார்க்கலாம் என்று அறிவுறுத்துவார் நாயகனின் அண்ணன். ஆனால் அத்தகைய குறி சொல்லும் தருணங்களில் அந்த தான் மனதால் படும் வலியும் வேதனையும் நாயகன் தன் அண்ணனிடம் சொல்லியும் அவர் காதுகளில் அது விழாது. ஒரு Psychic ஆக இருப்பதால், நாயகனை நெருங்கி வந்த பெண்ணும் அவனை விட்டு விலகிடுவாள். வாழ்வே வெறுத்த நிலையில் தன் அண்ணனை விட்டு தனியே சென்றிடுவார் நாயகன்.

வேறொரு கதையில், இணைப்பிரியா இரட்டை சகோதரர்கள். அவர்கள் அம்மா போதை பழக்கத்திற்கு அடிமையானவள். அவளை காப்பாற்றும் பொருட்டு போதையின் தாக்கத்தை குறைக்கும் மருந்து வாங்க செல்லும் அண்ணன் எதிர்ப்பாராத விதமாக ஓர் விபத்தில் உயிர் இழக்கிறான். அதை தாங்கி கொள்ள முடியா தம்பி அண்ணனை நினைத்து வாடுகிறான். அவனது அம்மாவும் சீர்த்திருத்த நிலையத்தில் சேர்க்கப்படுவார். அம்மாவையும், உற்ற அண்ணனையும் இழந்த சிறுவனை வேறொரு தம்பதியினர் தத்தெடுத்து கொள்வர். எனினும் தன் அண்ணன் பற்றிய நீங்கா நினைவுகள் இவனை விடாது துரத்தும். அண்ணனுடன் பேச வேண்டும் என்ற ஆவிகளுடன் பேசக்கூடிய நபர்களை தேடி பிடிப்பான். எல்லோரும் பொய்யானவர்கள். காசுக்காக இந்த வேலை செய்யும் மனிதர்கள். உண்மை இல்லாதவர்கள். இன்னும் தேடுகிறான்...

அப்போது தான் அந்த சிறுவன், கதையின் நாயகனை ஓர் புத்தக கண்காட்சியில் பார்க்கிறான். அந்த புத்தக கண்காட்சியில் நாயகி வெளியிட்ட புத்தகம் வாங்கும் பொழுது, முன் பின் சந்திக்காத நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் ஓர் பந்தம் இருப்பதை உணர்கிறார்கள் இருவரும். இருவரது கண்களும் நெருக்கத்தை முன்மொழிந்தன. நாயகன் பேச முற்படும் போது, அவனை பற்றி தெரிந்த சிறுவன் அவனை அழைத்து உதவுமாறு கேட்கிறான். விடாமல் துரத்துக்கிறான். குறி சொல்லும் வேலையே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நாயகன் இந்த சிறுவனின் விடாப்பிடியான நடவடிக்கையால், அவனுக்கு குறி சொல்கிறான். தன் அண்ணன் அவனிடம் என்னென்ன உரைக்க வேண்டுமோ அத்தனையும் உரைக்கிறான். சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். அன்று இரவே நாயகனுக்கு ஓர் தொலைப்பேசி அழைப்பு வருகிறது. நாயகி தங்கியிருக்கும் விடுதியின் பெயரை கண்டுப்பிடித்து நாயகனுக்கு சொல்கிறான் சிறுவன். எந்தவொரு சந்திப்பும் இல்லாத நாயகனும் நாயகியும் சந்திக்கின்றனர். அவர்கள் யார் என்பது அவர்கள் மனத்தால் உணர முடிகிறது. இணைக்கின்றனர்.

மீண்டும் மெல்லிய இசையால் நம் இதயங்களை உரசிப்பார்த்திருக்கிறார் கிளின்ட் ஈஸ்ட்வுட். முதன்முறையாக Parallel Story Telling வித்தையை கையாண்டிருக்கிறார். கதை எழுதியவர் பீட்டர் மார்கன் (Peter Morgan). நல்ல கதைக்களம். அதற்கேற்ற ஊட்டமிகு நடிகர்கள். நாயகனாக வரும் மேட் டேமனின் (Matt Damon) மற்றுமொரு சிறந்த படம் இது! நாயகியாக நடித்த Cécile de France தனது இயல்பான எதார்த்தமான நடிப்பால் நம்மை ஈர்ப்பார். கதாப்பாத்திரங்கள் அனுபவிக்கும் வலியினை தெளிவாய் உணர்த்தும் ஒளிப்பதிவு. மேலும் இதில் கையாளப்பட்டிருக்கும் Graphics உத்திகள் மிகவும் அருமை. கதையும் கதாப்பாத்திரங்களின் தன்மைகளையும் விழுங்கி விடாமல் அதை உபயோகித்த விதம் அழகு.

‘Hereafter’ கிளின்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்களில் இன்னொரு வித்தியாசமான படைப்பு! எந்தவொரு படாடோபமும் இல்லாத இயல்பான சித்திரம்.

- பி.சி.பாலசுப்பிரமணியம்.

Indian Cinematographer, Director, ScreenWriter - Balu Mahendra.

Innovative Plan of Congress