Saturday, July 8, 2017

விமான நிலையத்தில் காகங்கள்

பெரும் தூண்கள்,
உயிரமாய் இல்லாமல்
அகலமாய் வீங்கி கிடக்கும் கட்டிடங்கள்,
விடிந்தும் விடியா 
அக்காலை பொழுதில்
ஓயா ஓட்டம்,
கால்நோக காத்திருப்பு,
சங்கிலி தொடராய் கொட்டாவிகள்,
தூக்கம் வடிந்தொழுகியும்
அறிவிப்பு பலகை விட்டகலா கண்கள்,
ஒருபக்கம்…
ஆரத்தழுவல்கள்
ஆரா முத்தங்கள்
மறுபக்கம்…
தீரா கண்ணீர்
தீயாய் பிரிவு
’பாட்டி சொல்லுடா கண்ணா… பாட்டி…’
என்ற முதுகு வளைந்த முதியவளுக்கு பதிலாய்,
’இல்லல்ல… க்ரேனி! க்ரேனி!’
என்று புருவம் உயர்த்திய டேமில்நாட்டு பொடியன்… பேரன்!
இந்தியன் வழிக்காட்ட
அவன் காலடி பற்றி
பின்னால் ஓடும் வெள்ளையன்!
”டேக்ஸி சார்! டேக்ஸி!”
பிடிவலையும் தூண்டில் கண்களுமாய்
வெளிநாட்டு மீன்களின் பின் டேக்ஸி ஓட்டுநர்கள்,
அலைபேசி கடிவாளம் கட்டிய முகங்கள்,
இத்யாதி இத்யாதிகளுக்கிடையே
பொதுவழியில் எறியப்பட்ட
பல பேப்பர் கப்களிலிருந்து
சிந்தி ஈ மொய்த்து கிடக்கும்
சிலதுளி தேநீரை சுவைக்க
காகங்கள் ரெண்டு வெகுநேரமாய் காத்திருக்கின்றன
”மனுஷங்க… ச்சே!”
என்று அலுத்து கொண்டே,
“இவங்க யாருமே இல்லாம இந்த இடத்தை வெறிச்சோடி பாக்க ஆசையா இருக்கு… ஆமா இவங்க எல்லாம் இங்க என்ன பண்றாங்க?”
“ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டுக்கு பறந்து போவாங்க… வருவாங்க…”
“சும்மா சொய்ன்னு பறந்து போறதுக்கும் வர்றதுக்கும் இத்தனை அலப்பறையா?”
“ஆமா! இவங்க மனுஷங்க இல்லயா?”
“ஆமாம்மா! இவங்க மனுஷங்க…”
என்று இழுக்க...
குறுஞ்சிரிப்பு உதிர்த்தன காகங்கள்
😉

திராவிட மாடல்!